தேசிய கடன் மறுசீரமைப்பினால் தோட்டத் தொழிலாளர்களின் இறுதி சேமிப்புக்கு ஆபத்து ஏற்படுவதை அனுமதிக்க முடியாது:சோ. ஸ்ரீதரன்

தேசிய கடன் மறுசீரமைப்பின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களின் இறுதி சேமிப்பு மீது பலவந்தமாக கை வைக்கப்படுவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

” பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தேசிய கடன் மறுசீரமைப்பினால் தனியார் துறையில் தொழில் புரிகின்ற ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பனவற்றுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பரவலாக கருத்துக்கள் கூறப்படுகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் தமது அன்றாட உழைப்பின் ஊடாக இறுதிக் காலத்துக்கு சேமித்து வைத்திருக்கின்ற தோட்டத்து தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் தமக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்று தொழிலாளர்கள் தற்போது அச்சம் கொண்டுள்ளனர்.

அத்துடன் இந்தச் சேமிப்புக்கான 9 வீத வட்டிக்கும் எவ்வித உத்தரவாதம் இல்லை என்பது தொடர்பிலும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் தேசிய கடன் மறுசீரமைப்பினால் இந்த நாட்டில் தனியார் துறையைச் சேர்ந்த 25 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைய உள்ள அதே வேளை அவர்களுள் உள்ளடக்கப்படுகின்ற தோட்டத் தொழிலாளர்களும் மிக மோசமான நிலையில் பாதிப்படைவார்கள் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பொருளியல் ஆய்வாளர்களும் கருத்து கூற தொடங்கியுள்ளனர்.

எனவே தோட்டத் தொழிலாளர்களின் இறுதி சேமிப்பாக கருதப்படுகின்ற ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய தொகைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை தேசிய கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் பதில் கூற வேண்டும்” என்றார்.

Related Articles

Latest Articles