தேனிலவுக்கு மேகாலயா சென்றபோது, புது மாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், புது மணப்பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய பிரதேசத்தின் இந்துாரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி, 30. இவரது மனைவி சோனம், 27; திருமணமாகி எட்டு நாட்களே ஆன புதுமண தம்பதி, தேனிலவுக்காக வடகிழக்கு மாநிலமான மேகாலயா சென்றனர். அங்கு கிழக்கு காசி மலை மாவட்டத்தில், தொடர்மழை பெய்யும் சிரபுஞ்சிக்கு சென்றனர். அங்குள்ள நான்கிரியாட் கிராமத்தில் விடுதியில் தங்கி தேனிலவை கொண்டாடினர்.
அங்கு வாடகை ஸ்கூட்டரில் மே 23ல் வெளியே சென்றனர். பின்னர் அவர்கள் விடுதி திரும்பவில்லை. அவர்களின், ‘அலைபேசி சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தால், இருவரையும் தேடும் பணியை போலீசார் மேற்கொண்டனர். அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து, 20 கி.மீ.,தொலைவில் சோஹ்ரா பகுதி அருவிக்கரையில், ராஜா உடல் பாதி சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. தொடர்ந்து அவரது மனைவி சோனத்தை போலீசார் தேடினர்.
இதையடுத்து ராஜாவின் கையில் குத்தப்பட்டுள்ள டாட்டூ உதவியால் இறந்தவர் ராஜா என உறவினர்கள் உறுதி செய்தனர். சம்பவ இடத்தில் இருந்து பெண்ணின் வெள்ளை சட்டை, உடைந்த அலைபேசி மீட்கப்பட்டுள்ளதால், ராஜாவை கொன்ற கும்பல் சோனத்தை கடத்திச் சென்றார்களா என போலீசார் விசாரித்தனர்.
புது மாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவம் மேகாலயா அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அந்த மாநிலத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் தேடுதல் வேட்டை தீவிரமாக நடத்தப்பட்டது. தற்போது இந்த வழக்கில் மர்மம் விலகியது. கணவரை கொலை செய்ததை மனைவி ஒப்புக்கொண்டார். இறந்தவரின் மனைவி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சோனம் தனது கணவர் ராஜா ரகுவன்ஷியை ஆள் வைத்து கொலை செய்தது விசாரணையில் அம்பலம் ஆனது.