” உரியமாற்று ஏற்பாடுகளின்றி இரசாயன உரப்பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, கருத்து வெளியிடுகையிலேயே அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இரசாயன உரம் மற்றும் மருந்துகளுக்கே எமது நாட்டிலுள்ள விளைச்சல் நிலம் பல தசாப்தங்களாக பழக்கப்பட்டுள்ளது. இவற்றை பயன்படுத்துவதால்தான் சிறந்த விளைச்சல் கிடைக்கும் என்ற நிலை காணப்படுகின்றது. குறிப்பாக தேயிலை உற்பத்திக்கு ஆரம்பம் முதலே இரசாயன உரமும், மருந்தும்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே, அத்துறையில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமானால் இரசாயன உரம் அவசியமென உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அவ்வாறு இல்லாவிட்டால் அடுத்தாண்டில் தேயிலை உற்பத்தி 50 சதவீதத்தால் குறைவடையும் எனவும் குறிப்பிடுகின்றனர்.
சேதனப் பசளைமூலம் விவசாய நடவடிக்கையை மேற்கொள்வது தவறென நாம் குறிப்பிடவில்லை. ஆனால் இதற்காக கால அட்டவணையொன்று வகுக்கப்பட்டிருக்க வேண்டும். ஐந்து அல்லது பந்தாண்டு திட்டம் வகுக்கப்பட்டு மெல்லெனவே நகரவேண்டும். அப்போதுதான் மண்ணும் பழக்கப்படும். விவசாயிகளுக்கும் போதிய அனுபவத்தை பெறக்கூடியதாக இருக்கும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகளை எடுத்துக்கொண்டு வருடாந்தம் 20 வீதமென பயணித்தால் உரிய இலக்கை அடையலாம்.
இரசாயன உர இறக்குமதிக்கான வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிக பணம் செலுத்தப்படுவதை தடுப்பதும் உர தடைக்கான காரணங்களுள் ஒன்றாகும். ஆனால் இலங்கையில் போதுமானளவு சேதனப் பசளை உற்பத்தி செய்யப்படுகின்றதா? இல்லை. சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கே திட்டமிட்டுள்ளனர். இது தவறான செயலாகும்.
போதுமானளவு சேதனப் பசளையை உற்பத்தி செய்வதற்கான பொறிமுறை இல்லாமல் இரசாயன உர பயன்பாட்டையும் தடை செய்வதன்மூலம் உற்பத்தி வீழ்ச்சியடையும். நெல் உற்பத்தியும் பாதிக்கப்படும். இதனால் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.” – என்றார்.
