தையிட்டியில் 2ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இரவிரவாகக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தையிட்டியில் பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்து   அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரியும், மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் நேற்று மாலை 4 மணிக்கு இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது கட்சி பேதங்களைக் கடந்து பெருமளவிலான மக்கள் திரண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அந்தப் பகுதியில் பெருமளவிலான பொலிஸாரும் குவிக்கப்பட்டு விகாரைக்கான பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

அதேநேரம் பொலிஸ், இராணுவப் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் மீதான கண்காணிப்பும் அதிகளவில் காணக்கூடியதாக இருந்தது.

இவ்வாறு கடும் எதிர்ப்புக்கள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நேற்று மாலை முதல் இரவிரவாகத் தொடர்ந்தும் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்தப் போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இன்று காலை பலரும் ஒன்றுதிரண்டு பாரியளவிலான எதிர்ப்புப்  போராட்டத்தை நடத்தவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பெரும் போராட்டத்தில் அச்சுறுத்தல்களையும் தாண்டி அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி கவனவீர்ப்புப் போராட்டம் இன்று மாலை 6 மணிக்கு நிறைவடையவுள்ளது.

Related Articles

Latest Articles