தொழிலாளர் தேசிய சங்கத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக செயற்பட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட உப தலைவர் ரட்ணசாமி அவர்களின் திடீர் மறைவானது தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அனுதாபச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: தொழிலாளர் தேசிய சங்கத்தின் வளர்ச்சிக்காக கடந்த 50 வருட காலமாக பாடுபட்டவர் ரட்ணசாமி ஐயா ஆவார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் வளர்ச்சிக்கு சிறந்த ஆலோசகராக செயற்பட்டவர்.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு மிகுந்த ஒத்துழைப்பு வழங்கியவர். தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைமைத்துவத்திற்கு நம்பிக்கைக்குரியவர்.
அன்னாரின் திடீர் மறைவானது என்னை பொருத்தவரையில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.