தொழில் உரிமைகளுக்காக கொதித்தெழுந்த தோட்டத் தொழிலாளர்கள்

மலையகம் – 200 என மலையக அரசியல்வாதிகள் விழாக்களை கொண்டாடினாலும், தோட்ட நிர்வாகங்களால் தாம் அடிமைகள்போலவே நடத்தப்படுகின்றோம் என தோட்ட தொழிலாளர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

லிந்துலை பேரம் தோட்டத் தொழிலாளர்கள் 100 இற்கு மேற்பட்டவர்கள் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்ட நிர்வாகம் தமக்கு வழங்க வேண்டிய சலுகைகளை முறையாக வழங்கவில்லை எனவும், தோட்டத்தில் தொழில் செய்து ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் தேயிலைகூட நிறுத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டனர்.

ஆயிரம் ரூபா சம்பளம்கூட முறையாக வழங்கப்படாமல் தொழிலாளர்களுக்கு அரைநாள் பெயர் போடுதல் உள்ளிட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டியே வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

தோட்ட நிர்வாகம் தம்மை இழிவாக நடத்துவதாகவும் தேயிலை மலையில் தொழில் செய்யும் தொழிலாளர்களை நசுக்குவதாகவும் மேற்பார்வை செய்வதற்கு அதிகாரிகள் முறையாக நியமிக்கப்படவில்லை என தெரிவித்தனர்.

தோட்ட நிர்வாகம் தமக்கு முறையான பதிலை வழங்காவிட்டால் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கப் போவதாகவும் எச்சரித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் மேலும் தெரிவிக்கையில்

” ஆயிரம் ரூபாய் சம்பளத்தை கூட அரசியல்வாதிகள் முறையாக பெற்றுக் கொள்ள முடியாமல் மலையகம் 200 என்று நிகழ்வை கொண்டாடுகின்றனர்.

நாம் வாழும் வீடுகளை வந்து பாருங்கள் , எங்களுடைய வாழ்க்கை தரத்தை பாருங்கள், தோட்டத்தில் வைத்தியசாலை முறையாக இல்லை , தோட்டத்தில் வேலை செய்யாத மக்களின் பிள்ளைகளை சிறுவர் நிலையத்துக்கு அனுப்ப முடியாமல் அதற்கு தோட்ட நிர்வாகம் அனுமதி மறுக்கின்றது.

தேர்தல் காலத்தில் மாத்திரம் பொய் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு எங்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள வரும் அரசியல்வாதிகள் , எங்களுடைய பிரச்சனைகளை கவனத்தில் எடுப்பதில்லை.” எனவும் குற்றஞ்சாட்டினர்.

நிர்வாகத்தின் கருத்து

இது தொடர்பாக தோட்ட அதிகாரியிடம் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கேட்டபோது,

” தோட்டத்தில் உள்ள சிலர் தங்களின் லாபத்துக்காக இவ்வாறு தொழிலாளர்களை பிழையாக வழிநடத்துகின்றனர். தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டுவருகின்றன. தற்போது தோட்டத்தில் வேலை செய்ய கூடிய அதிகமானவர்கள் வேலைக்கு வராமல் வெளியிடங்களுக்கு செல்கின்றனர். இதனால் தேயிலை செடிகளை முறையாக பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் தங்களுடைய தோட்டத்தை பாதுகாத்துக் கொள்ள முன்வர வேண்டியது மிக முக்கியமானது. ” – என்றார்.

Related Articles

Latest Articles