தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 2000 அவசியம்!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தையும் அதிகரிக்க வேண்டும். ஏனெனில் எமது மக்கள் இன்றும் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். தினசரி சம்பளத்தை 2000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற கிளின் ஸ்ரீ லங்கா செயற்திட்டம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமர்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய உரையாற்றுகையில் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் குறிப்பிட்ட விடயங்களுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது சபைக்கு தலைமை தாங்கியவரின் அனுமதியுடன், நான் பிரதமரை நோக்கி கடந்த கால அரசாங்கத்தை போல் இல்லாமல் கிளின் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தின் எண்ணக்கருவை எடுத்துரைக்குமாறு குறிப்பிட்டேன்.

இதற்கு பிரதமர் ‘ பாராளுமன்றத்தில் எவ்வாறு உரையாற்ற வேண்டும் என்று எனக்கு கற்பிக்க வேண்டாம் என்று ஆவேசமாக குறிப்பிட்டார்’ பிரதமர் வழங்கிய பதில் முறையற்றது. பிரதமருக்கு கற்பிக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. அதற்கான நேரமும் எனக்கில்லை’

எதிர்க்கட்சியினரின் செயற்பாடுகள் கவலைக்குரியது என்று பிரதமர் குறிப்பிட்டார். உண்மையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் எமக்கும் கவலை தான் அளிக்கிறது. பிரதமரின் கோபம் மற்றும் ஆத்திரத்தை எம்மால் விளங்கிக் கொள்ள முடியும்.

கிளின் ஸ்ரீ லங்கா செயற்திட்டம் மற்றும் அதன் எண்ணக்கரு சிறந்தது . சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இந்த திட்டம் காணப்படுகிறது . ஆகவே சிறந்த திட்டங்களுக்க நாங்கள் என்றும் ஆதரவு வழங்குவோம்.

பெருந்தோட்ட மக்களையே நான் என்றும் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். எமது மக்கள் பல பிரச்சினைகளுக்கும், உரிமை மறுப்புக்கும் இன்றும் முகங்கொடுத்துள்ளார்கள்.

கடந்த பாராளுமன்ற அமர்வின் போது பெருந்தோட்ட மக்களின் நாற்சம்பளம் 2000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டேன். இதற்கு ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் அவசர பட வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தையும் அதிகரிக்க வேண்டும். ஏனெனில் எமது மக்கள் இன்றும் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். என்றார்.

Related Articles

Latest Articles