“ எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்படுவதோடு பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் விடிவு காலம் ஏற்படும்.” – என்று இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ எமது பிரதேசங்களிலும் கஷ்டப்படும் மக்கள் உள்ளனர். காலி,மாத்தறை மாவட்டங்களிலும் தோட்ட மக்கள் வாழ்கின்றனர். வீட்டுப் பிரச்சினை, காணிப்பிரச்சினை .சம்பளப் பிரச்சினைகள் இன்னும் இருக்கிறது. ஆனால் செய்நன்றி மறக்க முடியாது.
சில தலைவர்கள் தோட்ட மக்கள் குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். தோட்ட அதிகாரிகள் கொல்லப்பட்டனர், தோட்ட மக்களின் சம்பளப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றார்கள். எமது அடையாள அட்டைகைள் பறிக்கப்பட்டன.
பஸ்கள் எரிக்கப்பட்டன. இந்த அழிவுகளை ஜே.வி.பி செய்திருக்காவிட்டால் இந்த நெருக்கடி ஏற்பட்டிருக்காது.
எந்த நாளும் குறைபாடுகளை பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் பிரச்சினைகளை தீர்ப்பது யார்? தோட்ட மக்கள் , சிங்கள மக்களுடன் இணைந்த வாழ்வதோடு அவர்கள் நாட்டின் மீது அன்பு செலுத்துகின்றனர்.
கேஸ்சிலிண்டருக்கு வாக்களித்தால் கேஸ்சிலிண்டர் வீட்டுக்கு வரும்.இன்றேல் கேஸ்சிலிண்டர் பெற வீதிக்கு வர நேரிடும்.தாய்நாட்டின் மீது உண்மையான அன்பிருந்தால் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிப்போம்” என்றார்.