” நத்தார் பண்டிகையை முன்னிட்டு பிரம்மாண்டமான களியாட்ட நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள், விருந்துபசாரகளை இம்முறை நடத்தவேண்டாம். அதற்காக செலவிடும் பணத்தை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மக்களிடம் இன்று விசேட கோரிக்கை விடுத்தார்.
கொழும்பில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நத்தார் பண்டிகையின்போது ஏனைய மக்களைப் போன்று நாமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது உகந்ததென நினைக்கின்றேன். நத்தார் பண்டிகையின் போது உறவினர்களின் வீடுகளுக்கு செல்லும் பழக்கம் உள்ளது. இம்முறை அதனை தவிர்த்துக்கொள்ளுங்கள். வர்த்தக நிலையங்களுக்கு செல்வதை மட்டுப்படுத்துங்கள். ஒன்றுகூடல்கள், விருந்துபசாரங்கள் ஆகியவற்றை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
இம்முறை நத்தார் பண்டிகையை முன்னிட்டு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள பிரம்மாண்டமான களியாட்ட நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள், விருந்துபசார நிகழ்வுகளை இரத்து செய்து, அந்த நிகழ்வுகளுக்காக செலவிடப்படவிருந்த நிதியை COVID தொற்றினால் நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கு வழங்குமாறு நான் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
அரச வைபவங்களில் நாம் கலந்துகொள்ளவும் போவதில்லை. தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் ஐம்பதுக்கு மேற்படாத மக்களை ஒன்றுகூட்டி நத்தார் ஆராதனையை நடத்துவதற்கு அருட்தந்தையருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தவாறு, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நத்தார் பண்டிகையை கொண்டாடுங்கள்.” – என்றார்.