நமுனுகுல – கனவரல்ல 7 பிரிவுகளைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றும் இன்றும் போராட்டம் தொடர்ந்தது. இன்றைய தினம் நமுனுகுல கொடுக்காத்தன்ன பகுதியில் பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டமொன்றையும் முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டத்தில் நேற்றையதினம் கனவரல்ல 7 பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்ட போதிலும் இன்றைய தினம் 6 பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களே வேலை நிறுத்த போராட்டத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களின் வேண்டுகோளாக, கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டுள்ள தேயிலை தொழிற்சாலையை திறக்குமாறும், தேயிலை மலைகள் காடாக காணப்படுவதாகவும் அதை சுத்தம் செய்து தருமாறும் தங்களால் 16 கிலோ கிராம் தேயிலை கொழுந்து மாத்திரமே இந்த நாட்களில் பறிக்க முடியும் என்றும் அதற்கு மேல் தோட்ட நிர்வாகம் கேட்பதாக கூறியும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தே நமுனுகுல கொடுக்காத்தன்ன பகுதியில் கனவரல்ல 6 பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்றைய தினம் பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று கனவரல்ல தோட்ட நிர்வாகத்திற்கும் தொழிற் சங்கங்களுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
ராமு தனராஜா
