தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கங்கள் ஒன்றுபட வேண்டும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இன்று கூறுவதை நாங்கள் அன்றே கூறிவிட்டோம். எனவே, இணைவதற்கு நாம் ரெடி. இ.தொ.கா. ரெடியா? – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹட்டன், டிக்கோயா வனராஜாவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
” இன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிலாளர்களின் நன்மை கருதி அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றினைந்து செயற்பட முன்வர வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளது. அதனை நான் வரவேற்கின்றேன். ஆனால் இந்த விடயத்தை நாங்கள் அதாவது மலையக மக்கள் முன்னணியாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியாகவும் கடந்த காலங்களில் வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.
ஆனால் அன்று அதனை கண்டு கொள்ளாதவர்கள் இன்று ஆதே விடயத்தை பேசுகின்றார்கள். இது காலம் கடந்த ஞானமாக இருந்தாலும் பரவாயில்லை நாங்கள் தொழிலாளர்களுக்காக இணைந்து செயற்படுவதற்கு எப்பொழுதும் தயாராகவே இருக்கின்றோம்.
எனவே அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்ற இலங்கை தொழிலாளர் காங்கிரசே இதற்கான முன்னெடுப்புகளை செய்ய வேண்டும்.அப்படி செய்தால் நாங்கள் இணைந்து செயற்படுவதற்கு தயாராகவே இருக்கின்றோம்.
நான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே தொழிலாளர்களின் நன்மை கருதி கட்சி அரசியல் பேதங்களை மறந்து நாம் ஒன்றுபட வேண்டும் என்று ஊடகங்கள் ஊடாக தெரிவித்திருந்தேன்.ஆனால் அன்று அதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மௌனமாகவே இருந்தது.
இருந்தாலும் தற்பொழுது காலம் கடந்த ஞானம் ஏற்பட்டுள்ளதை நான் வரவேற்கின்றேன்.இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டால் நாங்கள் என்றும் தொழிலாளர்களுக்காக யாருடனும் இணைந்து செயற்படுவதற்கு தயாராகவே இருக்கின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
