அக்கரபத்தனை நகருக்கு மிக அண்மித்த பகுதியில் அமைந்துள்ள தோட்டம் அல்டோரி. இந்த தோட்டத்தை ‘பிரான்ஸ்காரன்’ தோட்டம் என தமிழில் அழைப்பதுண்டு. பிரான்ஸ் நாட்டு காரர்கள் நீண்ட காலம் இந்த தோட்டத்தை நிர்வகித்து வந்ததால் இந்த பெயர் கொண்டு அழைத்துள்ளனர். தற்போது அல்டோரி என்றே அழைக்கின்றனர்.
இந்த தோட்டத்தில் (1970 களில்) வாழ்ந்தவர்கள் ஓரளவு கல்வி அறிவு கொண்டவர்களாகவும் கலை ஆர்வமிக்கவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்கள் தமிழ் நாட்டில் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்களாகவும் இருந்தனர் .
அந்த காலப்பகுதியில் இந்த தோட்டத்தில் வசித்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து “அண்ணா”என்ற மன்றத்தை உருவாக்கி அதனூடாக இந்த கலைப்பணியினையும் சமூகம் சார்ந்த பணிகளையும் சிறப்பாக செய்து வந்துள்ளனர்.
குறிப்பாக இவர்கள் தோட்டத்தின் திருவிழா காலங்களிலும் ஏனைய பண்டிகை காலங்களிலும் நாடகங்களை எழுதி மேடையேற்றி உள்ளனர்.இவர்களில் பலர் சிரிமா சாஸ்திரி ஒப்பந்ததின் பிரகாரம் தாயகம் திரும்பியதுடன் சிலர் இயற்கை எய்தியும் உள்ளனர்.
(இவர்கள் நிகழ்த்திய நாடகங்களில் ‘சித்திரவள்ளி’ என்ற ஒட்டர்களின் கதை (சரித்திர நாடகம்)மிக முக்கியமானது.இது இன்னும் தமிழகத்தில் வழக்கத்தில் உள்ள நாடகமாகும்.)
அந்த வழி வந்தவர்களில் முக்கியமானவர் நாடகக்கலைஞர் ஆறுமுகம் வாசுதேவன்.
அல்டோரி தோட்டத்தை பூர்விகமாக கொண்டவர்.இவர் மேடை நாடகங்களிலும் பாரம்பரிய கூத்து கலைகளிலும் நடித்தது மட்டுமல்லாமல் பின்னாளில் நாடகங்களை தயாரித்து மேடையேற்றியும் உள்ளார். அத்தோடு இராமர் பஜனை பாடல்களை
இனிமையாகபாடும் பாடகரும் கூட.
1990 களில் கூத்து கலைகளில் ஒன்றான பொன்னர்சங்கர் கதையை பார்த்து அதன்பால் ஈர்க்கப்பட்டு அந்த கலையை தான் வசிக்கும் அல்டோரியிலும் அறிமுகப்படுத்த திரு.வாசுதேவன் அவர்களும் அவரது நண்பர் இராஜரட்ணம் சங்கர் என்பவரும் விரும்பினர்.அதன் பயனாக டயகமயில் பொன்னர் சங்கர் கலையில் புகழ்பெற்ற மாஸ்டர் காண்டியப்பன் என்பவரை அல்டோரிக்கு அழைத்து வந்து மூன்று மாதங்கள் பயிற்சி செய்து நாடகத்தின் பிறப்பு வளர்ப்பு, கிளிகன்னி,படுகளம் போன்ற முக்கியமான மூன்று பகுதிகளையும் நிகழ்த்தியுள்ளனர்.
இந்த நாடகத்தில் இவர் இந்த கலையில் வரும் முக்கிய பாத்திரமான பொன்னாராகவும் , பிரிதொரு சந்தர்ப்பத்தில் பெரிய காண்டியாகவும் நடித்துள்ளார்.
இதில் குறிப்பிடக்கூடிய விடயம் என்ன வென்றால் கூத்து கலைகளில் வரும் பெண்பாத்திரங்களில் பெண்கள் பெரும்பாலும் சேலை உடுத்தியே இருப்பார்கள்.இவர்கள் பெண்பாத்திரங்களுக்கு ஏற்றாற்போல் நவீன உடைகளை தைத்து புதுமையை புகுத்தியதாக (பதிவிட்ட படத்தில் காணலாம்)
திரு.வாசுதேவன் எம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
திரு.வாசுதேவன் எழுதி இயக்கிய நாடகங்களில் நாவல்களை தழுவி எழுதிய திருந்திய உள்ளம்,உங்களில் ஒருவன்,ஏழாவது மனிதன் போன்றவைகள் சிறப்பானது.இதில் சிவ நாடகங்களில் இவர் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
இந்த நாடகக் குழுவில் இவரோடு தற்போது அறிவிபாளராக அறியப்படும் நண்பர்
இராமன் கேதீஸ்வரன் என்பவரும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
(அ.ரெ.அருட்செல்வம்)
