நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு 11 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ இரண்டரை வருடங்கள் முடிவடைந்த பின்னர் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தால் தேர்தலை நடத்துவதற்குரிய நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கவேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது. அரசாங்க கூட்டிணைவு நிதியத்தில் இருந்து அதற்குரிய நிதியை அவர் வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் குறைநிரப்பு பிரேரணை ஊடாக நிதியை பெற்று வழங்கலாம்.
நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு 11 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலைவிடவும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தவே அதிகம் செலவாகும். 22 தேர்தல் மாவட்டங்களிலும் வேட்புமனுக்களை பெற வேண்டும், நிறைய வளங்களை பயன்படுத்த வேண்டிவரும். எது எப்படி இருந்தாலும் குறைந்தளவு செலவுடன் தேர்தலை நடத்த எதிர்பார்க்கின்றோம்.” – என்றார்.
அதேவேளை, இவ்வாரத்துக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்துக்குள் தேர்தல் நடத்தப்படலாம் என தெரியவருகின்றது.










