இன்றைய தினமும் (08) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence Zone) (வட அரைக்கோளம் மற்றும் தென் அரைக்கோளம் ஆகியவற்றிலிருந்து வரும் காற்று ஒடுங்கும் வலயம்) நாட்டின் வானிலையில் தொடர்ந்தும் செல்வாக்குச் செலுத்தியுள்ளதால் இந்நிலைமை ஏற்பட்டுள்தாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புக் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
