” 30 வருடகால போரை முடிவுக்குகொண்டுவந்த நாட்டில் தற்போது சுகாதாரத்துறை பயங்கரவாதமாக மாறியுள்ளது.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
சுகாதார துறையினருடன் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” வங்குரோத்து நிலையிலுள்ள நாட்டில் மக்கள் பணத்தை வீண் விரயம் செய்து, தரக்குறைவான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்யப்படுகின்றன. அவை தொடர்பான உண்மையான தகவல்கள் மூடிமறைக்கப்படுகின்றன. இது தொடர்பில் உண்மை தன்மையை எடுத்துறைக்கும் சுகாதார துறையை சேர்ந்த அதிகாரிகள் வேட்டையாடப்படுகின்றனர். இலவச சுகாதாரக் கொள்கையை அழிப்பதற்கு இந்த அரசு முயற்சிக்கின்றது. இது பயங்கரவாத நடவடிக்கைக்கு ஒப்பான செயலாகும்.” – என்றார்.
