நாட்டைவிட்டு தப்பியோட முற்பட்ட அங்கொட லொக்காவின் சகா கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மத்துமகே லசந்த சந்தன பெரேரா என்றழைக்கப்படும் ‘அங்கொட லொக்கா’வின் சகா கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

47 வயதான எல்லாவலகே சரத் குமார போலி கடவுச்சீட்டுடன் வெளிநாடு செல்ல முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விமான நிலைய புறப்பாடு முனையத்தில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி முக அடையாள அமைப்பு அவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் போது, சந்தேக நபர் அங்கொட லொக்காவின் முக்கிய பங்காளி என்பதும், ஐஸ் போதைப்பொருள் கடத்தியதற்காக முல்லேரிய பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

அத்துடன், கடந்த 2011ஆம் ஆண்டு வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்றமை போன்ற பல குற்றச்செயல்களுடன் சந்தேகநபர் தொடர்புபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக முல்லேரியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் தலைமறைவாகி இருந்த நிலையில் அங்கொட லொக்கா உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles