“நான் மஹிந்த ராஜபக்சவின் மகன். எனவே, அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து ஒருபோதும் அரசியல் முடிவுகளை எடுக்கப்போவதில்லை.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ஜே.வி.பியின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் ஜனாதிபதி ஆற்றிய உரை தொடர்பில் கருத்து வெளியிட்ட நாமல் கூறியவை வருமாறு,
” நாம் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து அரசியல் முடிவுகளை எடுக்கும் நபர்கள் கிடையாது. இது ஜனாதிபதிக்கும் நன்கு தெரியும். 2005 இல் அவர் எனது தந்தையுடன் செயற்பட்டார். அந்தவகையில் நான் மஹிந்த ராஜபக்சவின் மகன், அச்சுறுத்தல்கள்மூலம் எம்மை முடிவுகளை எடுக்க வைக்க முடியாது.
நாம் மக்கள் ஆணையை ஏற்போம். ஆனால் அரசியல் ரீதியில் விடுக்கப்படும் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய தயாரில்லை. மக்கள் வழங்கியுள்ள ஆணையின் பிரகாரமே உள்ளுராட்சிசபைத் தேர்தல்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும். ஜனாதிபதி அழுத்தங்கள் விடுப்பதால் எமது நிலைப்பாடு மாறாது.” – என்றார்.
