ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் கட்டாயம் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறு இல்லையேல் எமது ஆதரவாளர்கள் வேறு அரசியல் முகாமை நோக்கி நகரக்கூடும் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன இணைந்து கூட்டங்களை நடத்த வேண்டும். அதற்குரிய இடைவெளியை வழங்கினால் எமது ஆதரவாளர்கள் மாற்று அரசியல் முகாமை நோக்கி நகரக்கூடும். எனவே, அடுத்த கூட்டத்திலாவது இரு தரப்புகளும் இணைய வேண்டும். அவ்வாறு இணைவார்கள் என நம்புகின்றோம்.
நுகேகொடை கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களே 75 சதவீதம் பேர் பங்கேற்றனர்;. கூட்டத்தை நடத்துவதற்கு அக்கட்சியே முன்னின்றது. அதனால்தான் நாமல் ராஜபக்சவை இளவரசர் என விளித்தேன். இந்த விடயத்தை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. இந்நாட்டில் இனி இளவரசர்கள் தெரிவாகப்போவதில்லை.” – என்றார்.
