“நாம் வலிந்து போரை ஆரம்பிக்கவில்லை. புலிகள்தான் போருக்கு இழுத்தனர். எனவே, சிங்கள மக்களை இனவாதிகளாக காட்டுவதை நிறுத்தவும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஆணையிறவு உப்பளத்தை தெற்குக்கு அனுப்ப வேண்டாம் என அர்ச்சுனா எம்.பி. கூறியதாக அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி சபையில் குறிப்பிட்டிருந்தார். படையினர் இல்லாது இருந்திருந்தால் இன்னும் நடந்திருக்கும். எனவே, இனியாவது இராணுவத்துக்குரிய உரிய கௌரவத்தை அரசாங்கம் வழங்க வேண்டும்.
அதேபோல வடக்கில் நாம்தான் யுத்தத்தை ஏற்படுத்தினோம் என்ற தொனியில் அமைச்சரொருவர் நேற்று (நேற்று முன்தினம்) இந்த சபையில் கருத்து வெளியிட்டார். நாம் இனவாதிகள் அல்லர். அல்பிரட் துரையப்பாவை கொன்றது யார்? பிரபாகரன் தரப்புதான் அதை செய்தது. துரையப்பாவை கொன்றுதான் போரை ஆரம்பித்தனர்.
மாகாணசபை முறைமைக்கு பிரபாகரன் உடன்படவில்லை. சமாதான பேச்சுகளின்போது முன்வைக்கப்பட்ட விடயங்களும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மாவிலாறுவை மூடி யார் மீண்டும் போரை ஆரம்பித்தது? நாம் போரை கோரவில்லை. எனவே, தயவுசெய்து சிங்கள மக்களை இனவாதிகளாக காண்பிக்க வேண்டாம்.
புலிகள்தான் போரை கேட்டு வாங்கிக்கொண்டனர்.