நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா – பொதுத்தேர்தல் ஒத்திவைப்புநியூசிலாந்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவியதால், அங்கு நடைபெறவிருந்த பொதுத் தேர்தல் மேலும் 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பினை இன்று நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் வெளியிட்டார். அத்துடன், நாட்டின் பொதுத் தேர்தல் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி நடைபெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
102 நாட்களாக புதிய கொரோனா தொற்று நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்படாததை அடுத்து செப்டம்பர் 19ஆம் திகதி சுதந்திரமானதும் நியாயமபனதுமான தேர்தல் நடத்தப்படுமென அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இருப்பினும் கடந்த வாரம் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்த காரணத்தினால் தேர்தலை நடத்துவதை ஒத்திவைக்குமாறு பலர் கோரிக்கை விடுத்துவந்தனர்.
குறிப்பாக நியூசிலாந்தில் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்ட பொதுத் தேர்தலை தள்ளிவைக்குமாறு நியூசிலாந்து துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் நேற்று பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு கடிதம் எழுதினார்.
நேற்று நியூசிலாந்தில் 13 உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து தற்போது 69 நோயாளிகள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதனையடுத்து 1.7 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நாட்டின் மிகப்பெரிய நகரமான அக்லாந்தை ஆர்டெர்ன் கடந்த வாரம் இரண்டு வார முடக்க நிலையின் கீழ் வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.