நுவரெலியா மத்திய பொருளாதார நிலையத்திலும் , மத்திய பொருளாதார சந்தையிலும் மரக்கறிகளின் விலைகள் கடந்த சில நாட்களை விட மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் விலைப்பட்டியலின் பிரகாரம், கோவா ஒரு கிலோ 250 – 280 ரூபாவிற்கும் கரட் ஒரு கிலோ 240 – 250 ரூபாவிற்கும் லீக்ஸ் ஒரு கிலோ 250 – 260 ரூபாவிற்கும் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 270 ரூபாவிற்கும் ராபு ஒரு கிலோ 100 ரூபாவிற்கும் பீட்ரூட் ஒரு கிலோ 320 ரூபாவிற்கும் தக்காளி ஒரு கிலோ 450 ரூபாவிற்கும் புரோக்கோலி 1200 – 1300 ரூபாவிற்கும் ஒரு கிலோ கோலிபிளவர் 600 – 650 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாகவும்
அத்தோடு நாட்டு மரக்கறிகளின் விலையும் அதிகரித்த வண்ணம் காணப்படுவதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சியிடம் வினவிய போது மலையக மரக்கறி வகைகள் கட்டுப்பாடில்லாமல் நாடுமுழுவதும் விநியோகிக்கப்படுவதால் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் ,
நாட்டில் தற்போது பெய்து வரும் மழை காலநிலை காரணமாக விவசாயிகளினால் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், நாட்டில் தொடர்ந்தும் அதிகரித்து வரும் மழையின் காரணமாக குறித்த மரக்கறிகள் அழுகி போவதற்கான ஆபத்து உள்ளதாலும், உள்ளூர் மரக்கறி உற்பத்தி செய்யப்படும் இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பெருமளவு மரக்கறி தோட்டங்கள் பாதிப்படைந்துள்ளதாலுமே இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்குமாயின் மேலும் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்தாலும், மலையகத்தில் உருளைக்கிழங்கு விலை கடுமையாக குறைந்துள்ளது, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து இந்த நாட்டிற்கு உருளைக்கிழங்கு கொண்டு வரப்படுவதே காரணம் என தெரிவித்தார் .
மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படும் நிலையில் நாளாந்த கூலி தொழில் செய்யும் மக்கள் ஐம்பது ரூபாய் மற்றும் நூறு ரூபாய்களுக்கு மரக்கறிகளை கேட்கும் போது எங்களால் வியாபாரம் செய்ய முடியாத நிலையில் குறித்த பணத்திற்கு சிறிய அளவிலான பொருட்களை வழங்க கூடிய நிலைமை காணப்படுவதுடன், எமக்கு பாரிய நஷ்டத்தினை ஏற்படுத்தி செல்கின்றது என மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மரக்கறிகளின் விலைகளில் தொடர்ச்சியாக விலைகள் அதிகரித்த வண்ணம் காணப்படும் பட்சத்தில் பொதுமக்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்து உண்ண முடியாத நிலை ஏற்படும் என மக்கள் அச்சம் கொள்கின்றனர். செ.திவாகரன்
