நுவரெலியா பிரதான நகரில் உள்ள அரச வங்கி ஊழியர்கள் , நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்து சம்பள உயர்வைக் கோரி மதிய நேரத்தில் (04) அடையாள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
“ நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரச வங்கி ஊழியர்களுக்கு வரிச்சுமைக்கு ஏற்ற சம்பள உயர்வு அவசியம், ஏனைய அரச ஊழியர்கள்போல் எங்களுக்கு அனைத்து சலுகைகளும் அவசியம் ,
அரச வங்கிகளின் சம்பள அதிகரிப்பை உடன் உயர்த்துங்கள்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்கம் வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க விட்டால் நாடு முழுவதும பாரிய போராட்டங்களை நடத்த இருப்பதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எச்சரித்துள்ளனர்.
