நுவரெலியாவில் இபோச மற்றும் தனியார் பஸ் சாரதிகள், நடத்துனர்கள் நடு வீதியில் மோதல்! மூவர் கைது !!

நுவரெலியா இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும், நுவரெலியா இராகலை தனியார் பஸ் சாரதியிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் இ.போ.ச சாரதியும் , நடத்துனரும் , இதே வீதியில் சேவையில் ஈடுபடும் மேலும் ஒரு ஊழியரும் காயமடைந்ததாக தெரிவித்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என பொலிசார் தெரிவித்தனர் .

குறித்த சம்பவம் நேற்று (03) ஞாயிற்றுக்கிழமை மாலை நில்தண்டஹின்ன சந்தியில் இடம்பெற்றுள்ளது. இதனால் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று (04) நுவரெலியாவில் தீடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் மூவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில் இதுவரை தாக்கிய மூவர் மாத்திரம் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ் முரண்பாடுக்கு பிரதானமாக செயற்பட மேலும் மூவரை கைது செய்ய கோரியும் தாக்கிய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் நுவரெலியா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இரு தரப்புக்கும் இடையில் நேர அட்டவணை மற்றும் வழி அனுமதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முரண்பாடுகள் நீண்ட காலமாக உள்ளமையும் குறிப்பிடத்த்தது.

இந்த பகிஷ்கரிப்பு காரணமாக பொதுமக்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை இராகலை மற்றும் நுவரெலியா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

செ.திவாகரன்

Related Articles

Latest Articles