நுவரெலியாவில் பழமையான மரங்கள் வெட்டப்பட்டதற்கு வர்த்தக சங்கம் போர்க்கொடி

நுவரெலியா நகரில் பிரபலமான தனியார் ஹோட்டலொன்றில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையினால் வாகனம் தரிப்பிட வசதிகளை விரிவாக்கம் பணிக்காக வீதியோரத்தில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு யார் அனுமதி வழங்கியது ? என்ற வினாவுடன் அதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இப்பகுதியில் வெட்டப்பட்ட மரங்களுக்காக தற்போது வரை ஒரு மரம் கூட நடப்படாத நிலையில் மீண்டும் மரங்களை வெட்டியதற்கு பிரதேச வாசிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், தன்னார்வ தொண்டு அமைப்புகளும், நுவரெலியா வர்த்தக சங்கத்தினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுவருகின்றனர்.
மேலும் குறித்த பகுதியில் 2021ஆம் ஆண்டு மரங்கள் வெட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வீதி விரிவாக்க பணிக்காக அதிகமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து தற்போதுவரை ஒரு மரம் கூட நட்டு அதனை பராமரிப்பு செய்யவில்லை எனவும் அது போலவே இந்த மரங்களை வெட்டினாலும் ஒரு மரம் கூட நட போவது இல்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்க சென்ற போது முறைப்பாடினை ஏற்றுக்கொள்ள வில்லை எனவும் அதனை தொடர்ந்து நுவரெலியா மாவட்ட பிரதேச செயலாளர் இடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என வர்த்தக சங்கத்தினர் தெரிவித்தனர்.

ஒரு மரம் வெட்டினால் 10 மரங்கள் நட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என நுவரெலியா வர்த்தக சங்க உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன் உயர் அதிகாரிகளுக்கு தமது எதிர்ப்பினை தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது .

நானுஓயா நிருபர்

Related Articles

Latest Articles