நுவரெலியா வைத்தியசாலைக்கு தனது சொந்த நிதியில் பி.சி.ஆர் இயந்திரத்தை பெற்றுக் கொடுத்த மாணிக்கவாசகம் ஜயாவிற்கு எங்களுடைய மக்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஸ்ணன் எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் தற்போது பரவிவருகின்ற கொரோனா தொற்று காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பி.சி.ஆர் செய்வதில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டுள்ளமை தொடர்பாக நான் கடந்த 13.05.2021 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றியதுடன் இதன்போது நுவரெலியா மாவட்டத்திற்கு கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டுமாக இருந்தால் உடனடியாக இன்னும் ஒரு பி.சி.ஆர் இயந்திரத்தை சுகாதார அமைச்சு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டினேன்.
இந்த விடயம் அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளிவந்தது.இந்த செய்தியை பார்த்த அருண்பிரசாந்த் பவுன்டேசன் தலைவர் மாணிக்கவாசகம் ஜயா என்னுடன் தொடர்பு கொண்டு தான் தன்னுடைய பவுன்டேசன் நிதியில் இருந்து பி.சி.ஆர் இயந்திரம் ஒன்றை பெற்றுத் தருவதாக தெரிவித்தார்.
நான் உடனடியாக இந்த விடயம் தொடர்பாக நுவரெலியா பிராந்திய தொற்று நோய் பிரிவின் பொறுப்பாளர் டாக்டர் மதுர செனவிரத்னவிடம் தொடர்பு கொண்டு குறித்த பி.சி.ஆர் இயந்திரம் தொடர்பாக மாணிக்கவாசகம் ஜயாவுடன் தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொண்டேன்.இந்த விடயத்தில் ஊடகவியலாளர் எஸ்.தியாகு ,மாணிக்கவாசகம் ஜயாவுடன் தொடர்பை ஏற்படுத்தி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன் பயனாக தற்பொழுது நுவரெலியா வைத்தியசாலைக்கு இந்த பி.சி.ஆர் இயந்திரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாணிக்கவாசகம் ஜயா இது மாத்திரமல்ல நான் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த பொழுது தனது சொந்த காணித்துண்டொன்றை வத்தளை பகுதியில் கல்வி அமைச்சிற்கு வழங்கி பாடசாலை கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கு தனது பங்களிப்பை செய்துள்ளார்.
மேலும் டிக்கோயா வைத்தியசாலைக்கும் இயந்திரம் ஒன்றை பெற்றுக் கொடுத்துள்ளதுடன் இன்னும் பல உதவிகளையும் பலருக்கும் செய்து வருகின்ற ஒரு மனிதாபிமானம் மிக்க ஒருவர்.
இவருடைய இந்த செயற்பாடு ஏனையவர்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.இவருக்கும் இவருடைய பவுன்டேசனுக்கும் மலையக மக்களின் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதுடன்.
இந்த பி.சி.ஆர் இயந்திரத்தை பெற்றுக் கொள்வதற்கு அனைத்து ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டு உதவியமைக்காக அனைத்து ஊடகங்களுக்கும் எனத நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.












