நெற்றியில் பொட்டு அல்லது குங்குமம் வைப்பது மங்கல சின்னமாக கருதப்படுகிறது. இதற்கு பல்வேறான காரணங்கள் கூறப்படினும், மருத்துவ ஆராய்ச்சிகளின் பிரகாரம், பொட்டு வைக்கப்படும் இடம் மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிபடுத்துகிறது. அதிலும் முன் நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை.
இதன்காரணமாக நெற்றியில் வைக்கும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விப்பதாக கூறப்படுகின்றது. மேலும் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது.
நெற்றித் திலகம் எம்மை இறை அனுக்கிரகத்துடன் வாழவைப்பதுடன் தீய சக்திகள் அணுகாது தீய எண்ணங்கள் தோன்றாது காக்கிறது. நெற்றியில் திலகத்தை வைத்து கொள்ளும்போது, நான் கடவுளை எப்போதும் மனத்தில் நிலை நிறுத்துகிறேன். இறை தன்மையுள்ள இந்த உணர்வு எனது எல்லாச் செயல்களிலும் ஊடுருவி பரவட்டும். என் செயல்பாடுகளில் எப்போதும், நேர்மையும் உண்மையும் நிறையட்டும், என்று பிரார்த்திக்க வேண்டும்.
நெற்றி திலகம் லட்சுமிகரமானது என்பர். எனவே, குங்குமம் வைக்கும் போது, ஸ்ரீயை நமஹ’ என்றோ, மகாலட்சுமியே போற்றி’ என்று சொல்லியபடி வைத்துக் கொள்வது பெண்களுக்கு நலம் பயக்கும்.
குங்குமத்தை மோதிர விரலால்தான் நெற்றியில் வைக்க வேண்டும். ஏனைய விரல்களை பயன்படுத்தக்கூடாது. பெண்கள் தலை வகிடிலும், மாங்கல்யத்திலும், நெற்றியிலும் பொட்டு வைக்கிறார்கள்.
இந்த மூன்று இடங்களிலுமே லட்சுமி குடியிருப்பதாக ஐதீகம். கோயில்களிலோ வீட்டிலோ குங்குமத்தை எடுத்து இடது கையில் போட்டு கொண்டு, வலது கைவிரலால் தொட்டு வைப்பது கூடாது. வீட்டில் யாராவது ஒருவரை வலது உள்ளங்கையில் சிறிதளவே போட சொல்லி வலதுகை மோதிர விரலை வளைத்து குங்குமத்தை தொட்டு நெற்றியில் வைக்க வேண்டும்.