நேட்டோ இராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கான காலக்கெடு ஒன்றை அந்த அமைப்பின் தலைவர்கள் வழங்காததற்கு உக்ரைனிய ஜனாதிபதி விலோடிமிர் செலன்ஸ்கி அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
31 நாடுகளைக் கொண்ட நேட்டோ அமைப்பின் தலைவர்களின் இரண்டு நாள் மாநாடு கடந்த இரு நாட்கள் லிதுவேனிய தலைநகர் வில்னியஸில் நடைபெற்றது. இதில் எதிர்காலத்தில் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு உறுதி அளிக்கப்பட்டபோதும் அதற்கான காலக்கெடு ஒன்று நிர்ணயிக்கப்படவில்லை.
தனது நாட்டின் மீது படையெடுத்திருக்கு ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் பதில் தாக்குதல் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்தபோதும் அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையிலேயே உக்ரைன் நேட்டோவில் இணையும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளது.
“கூட்டணியினர் ஒப்புக்கொண்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்படும்போது கூட்டணியில் சேர உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கும் நிலையில் நாம் உள்ளோம்” என்று நேட்டோ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டபோதும் அதற்கான காலக்கெடு ஒன்று கூறப்படவில்லை.
“உக்ரைனிய அங்கத்துவத்திற்கான அழைப்பு விடுக்கப்படாதது மற்றும் காலக்கெடு நிர்ணயிக்கப்படாதது முன்னெப்போதும் நிகழாத ஒன்றாகவும் அபத்தமானதாகவும் உள்ளது” என்று செலன்ஸ்கி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். 2008ஆம் ஆண்டே நேட்டோவில் உக்ரைன் இணையும் என்று நேட்டோ அமைப்பு கூறியது. ஆனால், எப்போது என்று அது குறிப்பிடவில்லை.
ரஷ்யாவுடன் போர் இடம்பெற்று வரும் நிலையில் அதனால் நேட்டோவில் இணைய முடியாது என்பதை உக்ரைன் ஒப்புக்கொண்டபோதும் போர் முடிந்த பின் முடியுமான விரைவில் நேட்டோவில் இணைவதற்கான காலக்கெடுவையே அது எதிர்பார்க்கிறது.
எனினும் உக்ரைனுக்கு பரந்த அளவில் இராணுவ உதவிகளை வழங்க மேற்கத்தேய தலைவர்கள் இந்த மாநாட்டின்போது உறுதி அளித்துள்ளனர். இதில் ஜி7 உறுப்பு நாடுகள் உக்ரைனுடன் நீண்ட கால பாதுகாப்பு ஏற்பாடு ஒன்றை செய்ய திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேட்டோ அங்கத்துவ நாடுகள் உக்ரைனுக்கு உதவிகளை அதிகரிப்பது மூன்றாவது உலகப் போர் ஒன்றையே நெருங்கச் செய்யும் என்று ரஷ்யாவின் பலம்மிக்க பாதுகாப்பு கவுன்ஸிலின் பிரதிச் செயலாளர் டிமிட்ரி மெட்வடெவ் எச்சரித்துள்ளது.
