நோர்வூட் பிரதேச செயலகம் ஹட்டன் நகருக்கு இடமாற்றம் செய்யப்படாமல், தற்போது இருக்கும் கட்டிடத்திலேயே தொடர்ந்து இயங்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானிடம், நோர்வூட் பிரதேச செயலக செயலாளர் ஜி.எஸ்.டி கம்லத் தெரிவித்துள்ளார்.
நோர்வூட் பிரதேச செயலக, பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின்போது, பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோர்வூட் பிரதேச செயலக, பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஹட்டன் – டிக்கோயா நகர சபை மண்டபத்தில் (டிக்கோயா) இன்று நடைபெற்றது.
இதன்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான்,
“ சிறுநீரக நோய் தாக்கதிற்கான வைத்திய சேவைகளை வழங்குவதற்காக வைத்திய அதிகாரிகளின் பற்றாக்குறைகள் நிலவுவதால் அதனை விரைவில் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்று வலியுறுத்தினார்.
பாடசாலை மாணவர்கள் மத்தியிலான போதைப் பொருள் பாவனையும் சமூகப் பிரச்சினையாகும். மலையகத்திலும் இப்பிரச்சினை உள்ளது. இதனை தடுப்பதற்கு காவல்துறை ஊடாக நாம் நடவடிக்கை எடுத்திருந்தோம்.
ஒவ்வொரு பாடசாலைக்கும் ஒவ்வொரு கண்காணிப்பு குழு அமைத்தோம். அதில் கட்டாயமாக ஒரு பெண் பொலிஸ் அதிகாரியும் இருப்பார். அந்த செயற்திட்டத்தை மீண்டும் ஆரம்பித்தால் இந்த பிரச்சினையை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும்.
மேலும் எங்களது கோரிக்கையை ஏற்று நோர்வூட் பிரதேச செயலக இடமாற்றத்தை நிறுத்தியமைக்காக இந்த நேரத்தில் அரசங்கத்திற்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன். “ எனவும் ஜீவன் தெரிவித்தார்.
நோர்வூட் பிரதேச செயலக செயலாளர் ஜி.எஸ்.டி கம்லத் தலைமையில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கினைப்புக் குழு கூட்டத்தில், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான், கலைச்செல்வி, ஹட்டன்-டிக்கோயா நகர சபை செயலாளர், மஸ்கெலியா பிரதேச சபை செயலாளர், நோர்வூட் பிரதேச சபை செயலாளர், அரச நிறுவன அதிகாரிகள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், கிராம சேவகர்கள் என பலர் கலந்துக்கொண்டிருந்தார்கள்.