நல்லூரில் வேட்டியுடன் பக்தர் போல் பாசாங்கு செய்து ஏனைய பக்தர்களிடம் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
நல்லூர் கந்தசாமி ஆலய மகோற்சவம் இடம்பெற்றுவரும் நிலையில், ஆலயத்துக்குள் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த குறித்த நபர் ஆலயத்துக்குள் கடமையிலிருந்த பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பக்தர்களிடம் நூதனமாகத் திருடிய வங்கி அட்டையைப் பயன்படுத்தி ஆலயத்துக்கு அருகில் உள்ள புடவை விற்பனை நிலையத்தில் ஆடைகளைக் கொள்வனவு செய்தபோதே குறித்த நபர் இனங்காணப்பட்டார்.
இதையடுத்து துரிதமாகச் செயற்பட்ட யாழ். பொலிஸார் கண்காணிப்புக் கமராவின் உதவியுடன் குறித்த நபரைக் கைதுசெய்த நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










