பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை இராஜினாமா செய்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் பதவி விலகிய பின்னர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டத்தின்போது வெடித்த வன்முறைகளில் சிக்கி 98 பேர் உயிரிழந்துள்ளனர்.
பங்களாதேஷில் சுதந்திர போரில் பங்கெடுத்த வீரர்களின் வம்சாவளிகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால், போராட்டம் கைவிடப்பட்டது. எனினும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தீவிரவாதிகள் என பிரதமர் ஷேக் ஹசீனா கூறியதற்கு, கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து ஷேக் ஹசீனாவை பதவி விலக வலியுறுத்தி மீண்டும் போராட்டம் வெடித்தது.
இந்நிலையில், இந்த போராட்டங்களில் ஈடுபட்ட வன்முறைகளில் சிக்கி 14 காவலர்கள் உட்பட 98 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வன்முறைகளை கட்டுக்குள் கொண்டுவர, நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தாலும், தொடர் போராட்டம் இடம்பெற்றதால் பிரதமர் பதவி விலகியுள்ளார் எனவும், அவர் அயல் நாடொன்றில் தஞ்சம் அடைந்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.