860 போதை மாத்திரைகளுடன் பசறை பராக்கிரம மாவத்தை பகுதியில் நேற்று இரவு இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
27 மற்றும் 28 வயதுடைய பராக்கிரம மாவத்தை பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பசறை பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது இவ்வாறு போதை மாத்திரைகளுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது ஒருவரிடம் இருந்து 420 போதை மாத்திரைகளும், மற்றவரிடம் இருந்து 440 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பதுளை மாவட்ட பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல மற்றும் பதுளை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தவின் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி புத்திக குணசேகர, பசறை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் அமரசேன, மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ரட்ணாயக்க ஆகியோரின் தலைமையில் 38118 சாஜன் உபுல், 68558 சாஜன் சமில், 54251 சாஜன் செனவிரத்ன, 82971 கான்ஸ்டபிள் கபுகொடுவ ஆகிய அதிகாரிகளே குறித்த சந்தேக நபர்களை போதை மாத்திரைகளுடன் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இன்றைய தினம் 09/02 பசறை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா