பசறை, கோணக்கலை காவத்த தோட்டத்தில் 13 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் எனக் கூறப்படும் நபரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர், பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது, சந்தேக நபரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார் என பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பசறை கோணக்கலை காவத்தை தோட்டத்தை சேர்ந்த 27 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 17 ஆம் திகதி தனது வீட்டிற்கு அருகில் உள்ள வாகனம் சீரமைக்கும் இடத்தில் பணிபுரியும் சந்தேக நபர், குறித்த மாணவன் கடைக்கு சென்று வீடு திரும்புகையில் மாணவனை, வாகனம் திருத்தும் இடத்துக்கு அழைத்து – பலவந்தமாக மது அருந்தக் கொடுத்து வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த மாணவன் தற்போது பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தெரிவித்துள்ளது.
பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த மற்றும் பசறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் துலித் டி சில்வா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி E.M பியரட்ணவின் மேற்பார்வையில், சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
ராமு தனராஜ்