பசறை 13 ஆவது மைல் கல்லில் இடம்பெற்ற தனியார் பஸ் விபத்து பாதை சீர்கேட்டினால் ஏற்பட்டதல்ல. வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதற்கு பொறுப்பாக இருக்க வாய்ப்பில்லையென்று, விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற இவ்விபத்து குறித்து ஆராய விபத்து இடம்பெற்ற மறுதினமே மூவரடங்கிய விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் அறிக்கை இன்று உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
அவ் அறிக்கையிலேயே, மேற்படி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்றமையானது, பாதை சீர்கேட்டினாலேயே இடம்பெற்றதென்று, வீதி அபிவிருத்தி அதிகார சபை மீது குற்றஞ் சுமத்தப்பட்டிருந்தது. இதையடுத்தே, டபள்யு.பீ.வீரதுங்க தலைமையிலான மூவரடங்கிய விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. இவ் விபத்து பாதை தரத்தினால் ஏற்பட்டதல்லவென்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இவ்விபத்தில் 14 பேர் பலியானதுடன், 32 பேர் காயங்களுக்குள்ளாகியிருந்தனர். லுணுகலையிலிருந்து கொழும்பை நோக்கி பயணித்த தனியார் பஸ்சே, விபத்துக்குள்ளானதாகும்.
விபத்து தொடர்பாக விபத்துக்குள்ளான பஸ் சாரதியும், விபத்துக்குள்ளான பஸ்சின் எதிர்த்திசையில் வந்த லொரிச் சாரதியும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தபோதிலும், தற்போது பஸ் சாரதி மட்டுமே நாளை மறுதினம் (08-04-2021) வரை விளக்கமறியலில் இருந்து வருகின்றார். லொரிச் சாரதி சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்த வழக்கு விசாரணை நாளை மறுதினம் (08-04-2021) பசறை நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினம் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்ட லொரிச் சாரதியும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று, பசறை நீதிமன்ற நீதிபதி சமிந்த கருணாதாச உத்தரவிட்டுள்ளார்.
எம். செல்வராஜா, பதுளை