பசறை பிரதேச சபைக்கு முன்னால் இன்று காலை பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பசறை பிரதேச சபை கட்டிடத்தில் வெளியாருக்கு – ஆடை விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தே, பசறை நகர வியாபாரிகள் சங்கத்தினரால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனால் பசறை நகரிலுள்ள கடைகள் இன்று காலை மூடப்பட்டிருந்தன.
” பண்டிகை காலத்தில் வெளியாருக்கு ஆடை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு பிரதேச சபை மண்டபத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கு மலிவு விலையில் விற்கப்படுகின்றது. இதனால் தமது வர்த்தகம் பாதிக்கப்படுகின்றது.” – என வியாபாரிகள் சுட்டிக்காட்டினர்.
பிரதேச சபையின் நுழைவாயிலுக்கு முன்பாக கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், தவிசாளரே ! இதற்கு தீர்வு வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். எனினும், சம்பவ இடத்துக்கு தவிசாளர் வரவில்லை. இதன்போது அங்கிருந்த மலிவு விற்பனை காரர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
பொலிஸாரும் குவிந்தனர். தவிசாளருடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. திங்கட்கிழமை தீர்வு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
அதேவேளை, பிரதேச சபைக்கு வருமானம் பெறும் நோக்கில்தான் மண்டபம் வழங்கப்பட்டது. இங்கு இலாப விலையில் மக்களுக்கு ஆடைகள் வழங்கப்படுகின்றன. இதனால் மக்கள் நன்மை பெறுகின்றனர். இதனை சகித்துக்கொள்ள முடியாதவர்களே போராட்டம் நடத்தினர் என்று பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.
-ராமு தனராஜா-
