படல்கம விவகாரம்:தாய்க்கு விளக்கமறியல்

படல்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆண்டிமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து அழுகிய நிலையில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சிறுவனின் தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகியோர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, சிறுவனின் தந்தை மற்றும் பாட்டியை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது.

அத்துடன், உயிரிழந்த சிறுவனின் தாயை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

படல்கம – ஆண்டிமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து துர்மணம் வீசுவதாக பிரதேசவாசிகளிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய, காவல்துறையினர் நேற்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அதன்போது, அவ்வீட்டில் உள்ள அறையொன்றின் கட்டிலில் 10 வயது சிறுவனின் சடலம் கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சிறுவன் கடந்த 7 நாட்களாக தொண்டையில் சளி அடைப்பட்டதால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவரது பெற்றோர் எவ்வித மருத்துவ சிகிச்சைக்கும் சிறுவனை அழைத்துச் சென்றிருக்கவில்லையென தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த சிறுவனின், பெற்றோர் அவரை அறையொன்றில் வைத்து நோய் குணமாகும் வரை பிரார்த்தனைகளை நடத்தியிருந்த நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன்பிறகு, சிறுவனை மீண்டும் உயிர்ப்பிப்பதாக அவரது பெற்றோர் தொடர்ந்தும் சமயப் பிரார்த்தனைகளை மேற்கொண்டனர் என்றும் எந்த சந்தர்ப்பத்திலும் சிறுவனை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles