UPDATE –
கண்டி, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாணவி ஒருவர் வேனில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கறுப்பு வேன் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் சாரதி இன்று ஞாயிற்றுக்கிழமை (12) கைது செய்யப்பட்டார்.
பாடசாலை மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக வேனில் கடத்தி செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காணொளிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு முஸ்லிம் பாடசாலை மாணவிகள் பிரதான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு சிறிய கருப்பு வேனில் வந்த குழுவினர், மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர்.
உடனடியாக பயந்துபோன மற்றொரு மாணவி அங்கிருந்து ஓடியதுடன், இந்நிலையில் அவரை காப்பாற்றுவதற்கு நபரொருவர் முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை.
கடத்தலுடன் தொடர்புடைய வேன் பொலன்னறுவை நகரில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த வாகனம் வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கடத்தப்பட்ட சிறுமி மற்றும் கடத்தலை மேற்கொண்ட நபர் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
எவ்வாறாயினும், கடத்தல் ஈடுபட்ட நபர் கடத்தப்பட்ட மாணவியின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் தவுலகல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடத்திச்சென்றவர்களை கைது செய்வதற்குரிய விசாரணை வேட்டையில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.
க.கிஷாந்தன்










