மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கத்தில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துள்ள அனைத்து அடக்கு முறைக்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்து மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கத்துடனான கலந்துராயாடலில் முக்கியமான தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கும் மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கத்திற்கும் இடையிலான கலந்துரையாடலொன்று கொட்டகலை CLF வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக இடம்பெற்ற தொழிற்சங்க நடவடிக்கையில் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம் கம்பனிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடிய தொழிற்சங்க நடவடிக்கை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மேற்கொண்டது.

இதன் விளைவாக மக்களை அடக்கியாள நினைத்த மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிடம் பேச்சுக்கு வந்தது.
மேலும் பேச்சின்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாட்சம்பளம்,மற்றும் ஏனைய பல சலூகைககள் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்தனர். அக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கத்திடம் எழுத்து மூலம் உறுதி மொழியையும் வழங்கவேண்டுமென இ.தொ.காவின் உயர்பீடம் தெரிவித்தது.
இதனையடுத்து எதிர்வரும் தினங்களில் தாம் கடிதம் மூலமாக உறுதி தெரிவிப்பதாக மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கம் இ.தொ.காவின் உயர்பீடத்திற்கு தெரிவித்தது.அதேநேரத்தில் கடிதம் மூலமான உத்தரவாதம் கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை எனவும் இ.தொ.கா தெரிவித்தது.

இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதி தலைவர்களான அனுஷா சிவராஜா, கணபதி கனகராஜ், தேசிய அமைப்பாளர் ஏ.பி சக்திவேல் மற்றும் இ.தொ.காவின் முக்கிய பிரமுகர்கள் , தோட்ட தலைவர், தலைவிகள் மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கத்தின் நிறைவேற்று பணிப்பாளர் விபுல புசலாவ, தோட்ட முகாமையாளர்கள் உள்ளிட்டவர்களும் கலந்துக்கொண்டனர்.

