” மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகவேண்டும்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் மேற்படி நிலைப்பாட்டை அறிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மஹர சிறைச்சாலை மோதலில் கொல்லப்பட்ட கைதிகளில் நால்வர், துப்பாக்கிச்சூட்டில்தான் உயிரிழந்தனர் என விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை மேற்கோள்காட்டி ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் துப்பாக்கிச்சூட்டில் எவரும் பலியாகவில்லை, கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டன என்று இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நாடாளுமன்றத்தில் அண்மையில் அறிவித்திருந்தார்.
விசாரணை முடிவடைவதற்கு முன்னரே, தவறாக தகவலை வெளியிட்டு நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துவதற்கு இராஜாங்க அமைச்சர் முற்பட்டுள்ளார். அமைச்சுக்கான உத்தியோகப்பூர்வ அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மக்களுக்கும் போலியான தகவலை வழங்கியுள்ளார். எந்த அடிப்படையில் தான் தகவல் வெளியிட்டுள்ளார் என்பதனை லொஹான் ரத்வத்த தெளிவுபடுத்த வேண்டும். அதேபோல அவர் பதவி விலகவும் வேண்டும்.
தவறிழைத்துவிட்டு அதனை மறைப்பதற்காக பொய்யுரைக்கும் அரசாங்கம்தான் இது என்பது மஹர சிறைச்சாலை சம்பவத்தின் ஊடாக மீண்டும் உறுதியானது.” – என்றார்.