பதுளையில் கோவில்களை உடைத்து கொள்ளையடித்து வந்த மூவர் கைது!

பதுளையில் பல பகுதிகளிலும் ஆலயங்கள் மற்றும் விகாரைகளை உடைத்து , உண்டியல் பணம், நகைகள், பெறுமதிமிக்க பித்தளை பொருட்களை கொள்ளையடித்து வந்தனர் என சந்தேகிக்கப்படும் மூவர் பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி E.M. பியரட்ண தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை வீதி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கையில், சந்தேகத்துக்கு இடமான முறையில் பயணித்த ஸ்கூட்டர் ரக உந்துருளி ஒன்றையும் மேலும் ஒரு உந்துருளியையும் நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தினர்.

இதன்போது ஸ்கூட்டர் ரக உந்துருளியில் வைக்கப்பட்டிருந்த பை ஒன்றில், ஆலயங்களில் உள்ள பித்தளை பொருட்கள் இருந்துள்ளன.

இதனையடுத்து குறித்த உந்துருளியை சோதனைக்கு உட்படுத்திய போது பணம், பித்தளை பொருட்கள், தங்க நகைகள் அடகு வைத்ததற்கான பற்றுச் சீட்டுகள், கத்தி உட்பட மேலும் சில ஆயுத பொருட்களும், 3 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 2 உந்துருளிகளும் சந்தேக நபர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

இவர்கள் மீது சந்தேகம் கொண்ட பசறை பொலிஸார், இவர்களை பசறை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்ட போது, ஹொப்டன் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றையும் பசறை பெல்காத்தன்ன பகுதியில் உள்ள விகாரை ஒன்றையும் உடைத்து குறித்த பொருட்களை கொள்ளையடித்ததாக கூறியுள்ளனர்.

இதற்கிடையில் பெல்காத்தன்ன விகாரையின் தேரரினால் பெல்காத்தன்ன பகுதியில் அமைந்துள்ள விகாரை நேற்று முன்தினம் இரவு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப் பட்டுள்ளதாக பசறை பொலிஸ் நிலையத்தில் புகாரளிக்கப் பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

உந்துருளியில் பயணித்த 25 வயதுடைய ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் , 29 வயதுடைய ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரும், 20 வயதுடைய கனுபெலல பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த இருவரும் கணவன், மனைவி என பசறை பொலிஸார் தெரிவித்ததுடன் கனுபெலல பகுதியைச் சேர்ந்தவர் இவர்களது நண்பர் என தெரியவந்துள்ளது.

இவர்கள் பதுளை பகுதிகளில் பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்பு பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles