பதுளையில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று

பதுளையில் 15 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் பதுளை மாநகர பொது சுகாதாரப் பரிசோதகர் ரணில் பிரியங்கர தெரிவித்தார்.

தொற்றாளர்களில் 12 பேர், பதுளை அரச வங்கியொன்றிலிருந்தும், பதுளை தனியார் வங்கியொன்றில் ஒருவரும், பதுளை மாநகருக்கு அண்மையிலுள்ள யாழ்ப்பாணவத்தை மற்றும் பதுளைப்பிட்டிய ஆகிய இரு இடங்களில் இருவருமாக 15 பேர் கோவிட் 19 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

மேற்படி இரு வங்கிகளில் காணப்பட்ட தொற்றாளர்கள் 13 பேரும் கொக்கல தனிமைப்படுத்தல் நிலையத்திற்கும், ஏனைய இருவர் பிந்துனவௌ மற்றும் ககாகொல்லை கோவிட் 19 சிகிச்சை நிலையத்திற்கும் (இன்று) 28-04-2021ல் அனுப்பப்பட்டுள்ளனர்.

தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணிய 40 பேர், அவர்தம் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் பலருக்கு பி.சி. ஆர். பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், பொது சுகாதாரப் பரிசோதகர் ரணில் பிரியங்கர மேலும் தெரிவித்தார்.

ஹல்துமுள்ளைப் பகுதி பாடசாலையொன்றில் தரம் 3ல் கல்வி கற்று வந்த மாணவனொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளதாக, ஹல்துமுள்ளை பொது சுகாதாரப் பரிசோதகர் அசங்க சம்பத் கூறினார்.

அத்துடன், அப் பாடசாலையின் தரம் 3, தரம் 4 ஆகிய வகுப்புக்களின் வகுப்பாசிரியர்கள் இருவரும், மாணவர்கள் நால்வரும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென்றும், மேலும் அம் மாணவனின் பெற்றோர், சகோதரர்கள், தொடர்பைப் பேணிய ஏழுபேர் ஆகியோருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும், பொது சுகாதாரப் பரிசோதகர் மேலும் கூறினார்.

எம். செல்வராஜா,

Related Articles

Latest Articles