பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் ஏற்பாட்டில் கல்லூரியின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு நிதி திரட்டும் நோக்கில் எதிர்வரும் 28,29 ஆம் திகதி மாபெரும் மென்பந்து கிரிக்கெட் போட்டி பதுளை கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்படவுள்ளதாக பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எஸ். மகேந்திரன் தெரிவிக்கிறார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்; கல்லூரியின் பழைய மாணவர்களின் அணிகளுக்கிடையில் நடத்தப்படும் இச்சுற்றுப்போட்டி லீக் போட்டிகளாக இடம்பெறவுள்ளது. பழைய மாணவர் சங்கத்தின் மூலமாக கடந்த காலங்களில் பாடசாலையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படுகிறது.
எனினும் சங்கம் முழு சக்தியுடன் கல்லூரியின் கல்வி, இணைப்பாடவிதானம் மற்றும் விளையாட்டு செயற்பாடுகளை விருத்தி செய்ய பங்களிப்பு செய்வதற்கு நிதி உதவிகள் தேவைப்படுகிறது. அதனை திரட்டி கொள்ளும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போட்டிகள் கல்லூரியின் அதிபர் கே. திருலோகசங்கர் தலைமையில் இடம்பெறவுள்ளது. 20 பழைய மாணவர் அணிகள் கலந்து கொள்ளும் இப்போட்டியில் கலந்து கொண்டு கல்லூரியின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார்.
பசறை நிருபர்










