‘பதுளை மாவட்டத்திலும் தடுப்பூசி திட்டத்தை முன்னெடுக்க திட்டம் வகுப்பு’

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளைக் கூடிய விரைவில் பதுளை மாவட்டத்திலும் முன்னெடுக்குமாறு ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்ட கொவிட் கட்டுப்பாட்டுக் குழுக் கூட்டம்  இன்று பதுளை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசி நடவடிக்கைகளை முன்னெடுக்க 513,325 தடுப்பூசிகள் தேவைப்படுவதாகவும், அவற்றைக் கிராம சேவகர் பிரிவுகளின் ஊடாக முன்னெடுக்க 266 இடங்கள் தற்பொழுது தயார் நிலையில் காணப்படுவதாகவும் பதுளை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

அதற்கு மேலதிகமாக மாவட்டத்தில் காணப்படும் ஆயுர்வேத மருத்துவ நிலையங்களையும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளுக்கு உள்வாங்குமாறு ஆளுநரால் ஆலோசனை வழங்கப்பட்டது.

அதேவேளைப் பொதுமக்களுடன் எந்நேரமும் நேரடித் தொடர்புகளைப் பேணிவரும் சுகாதார பிரிவினர், பாதுகாப்பு பிரிவினர், கிராம சேவகர்கள், சமூர்த்தி அதிகாரிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் நபர்களுக்கு முன்னுரிமை வழங்கி, முன்னுரிமை கோரிக்கை பட்டியலொன்றைத் தயாரித்து சுகாதார அமைச்சுக்கு வழங்குமாறு மாவட்ட சுகாதார அதிகாரி மற்றும் மாவட்டச் செயலாளருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

மேலும் கொவிட் சிகிச்சை நிலையங்களில் காணப்படும் கட்டில்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

அதற்கமைய தற்பொழுது காணப்படும் சிகிச்சை நிலையங்களுக்கு மேலதிகமாக பதுளை நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 260 கட்டில்களைக் கொண்ட கொவிட் இடைநிலை சிகிச்சை மையத்தைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் கல்வி நடவடிக்கைகள் ஒன்லைன் தொழிநுட்பத்தில் நடைபெற்று வருகிறது. என்றாலும் தற்பொழுது நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு காரணமாக தொலைபேசிகளுக்கு தேவையான இன்டர்நெட் Data அட்டைகளைப் பெற்றுக்கொள்வதில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாகக் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அதற்குத் தீர்வாக இணையச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு வீட்டுக்கு வீடு தமது சேவைகளை வழங்குவதற்கு அனுமதியை வழங்கவும், கிராமங்களுக்குச் செல்லும் மொபைல் லாரிகளில் தேவையான தொலைபேசி அட்டைகளையும் அனுப்பவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில், இராஜாங்க அமைச்சர் தேனுக விதங்கமகே, பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷன் டெனிபிடிய, மாகாண பிரதான செயலாளர், பதுளை மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள் கலந்துகொண்டதுடன், Zoom தொழிநுட்பத்தை ஊடக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

எம்.செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles