உடப்புஸ்சலவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரூபஹா அம்பகாலியத்த கிராமத்தில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான எச்.எம்.பிரேமரத்ன (வயது 45) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக உடப்புஸ்ஸலாவை பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வயல் நிலத்தை நாசமாக்கும் பன்றிகளை கட்டுப்படுத்த வேலியமைத்து அதற்கு சட்டவிரோதமாக மின்சாரம் வழங்கியுள்ளார்.
ஒவ்வொறு நாளும் இரவு வேளையில் மின்சாரத்தை வேலிக்கு பாய்ச்சிவிட்டு அதிகாலை 05 மணியளவில் மின்சாரத்தை நிறுத்தி விட்டே வயலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (12) இரவு வழமைபோல வயல் நில பாதுகாப்பு வேலிக்கு மின்சாரத்தை வழங்கிவிட்டு நித்திரைக்கு சென்றுள்ளார்.
பின் சனிக்கிழமை (13) காலை வயலுக்கு சென்ற அவர் வயல் நில பாதுகாப்பு வேலிக்கு பாய்ச்சப்பட்டிருந்த மின்சாரத்தை நிறுத்த மறந்து வயலுக்கு வேலியை தாண்டி சென்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் உடப்புஸ்சலாவ பொலிசார் தெரிவித்தனர்.










