பப்புவா நியூ கினியாவின் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில், 21 பேர் உயிரிழந்தனர்.
பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. அங்கு மலைப்பகுதியான எங்கா மாகாணத்தில் உள்ள குகாஸ் கிராமத்தில், நேற்று அதிகாலை 2:00 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில், வீடுகள் தரைமட்டமானதால், தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அப்படியே புதையுண்டனர். உள்ளூர்வாசிகள் 30 பேர் வரை இறந்ததாகவும், 18 உடல்கள ; இதுவரை மீட்கப்பட்டதாகவும் எங்கா கவர்னர் பீட்டர் இபடாஸ் தெரிவித்தார்.
21 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலின் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் பகுதியில் பப்புவா நியூ கினியா அமைந்துள்ளதால், இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இதனால் நிலச்சரிவும், பாதிப்புகளும் நிகழ்கின்றன.
கடந்த ஆண்டு மே மாதம் எங்காவில் ஏற்பட்ட நிலச்சரிவில், கிராமவாசிகள் 670 பேர் உயிரிழந்ததாக ஐ.நா., சபை தெரிவித்தது. ஆனால், 2,000க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்ததாக பப்புவா நியூ கினியா அரசு கூறியது.










