பயங்கரவாத தடைச்சட்டம் 3 மாதங்களுக்குள் நீக்கம்!

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் மூன்று மாதத்துக்குள் நீக்கப்படும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றில் நேற்று காலை ஒளிபரப்பான விவாத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இந்த தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையானது எமது நாட்டுக்கு மிக முக்கியமானதாகும். அமெரிக்காவின் வரி விதிப்புகளுக்கு மத்தியில் ஐரோப்பிய வரிச்சலுகையானது எமக்கு பலமாக அமைந்துள்ளது. எனவே, அதனை நாம் தக்க வைக்க வேண்டும்.

இது தொடர்பான பேச்சுகள் இடம்பெற்றுவருகின்றன. சுற்றாடல்,  தொழில் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. எமது தரப்பில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தினாலும், வலியுறுத்தாவிட்டாலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நிச்சயம் நாம் நீக்குவோம். அதுதான் எமது கொள்கை. இதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழு  இன்று – 09 கூடவுள்ளது.

நாம் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் புதிய சட்டத்தை நிறைவேற்றி, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles