‘பயணக்கட்டுப்பாட்டால் பயனில்லை – முழு நாட்டை 14 நாட்களுக்கு முடக்கவும்’

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த வேண்டுமெனில் முழு நாட்டையும் 14 நாட்களுக்கு முடக்க வேண்டும் என மருத்துவ சங்கங்கள் உட்பட சுகாதார தரப்புகள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில்,கொழும்பு பல்கலைக்ககழகத்தின் மருத்துவபீட பேராசிரியர் மஞ்சு வீரசிங்கவும் இதனை நேற்று வலியுறுத்தியுள்ளார்.

பயணக்கட்டுப்பாட்டை இடையில் தளர்வு செய்யும் முறையால் உரிய பலன் கிடைக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் கொழும்பு பல்கலைக்ககழகத்தின் மருத்துவபீட பேராசிரியர் மனோஜ் வீரசிங்க மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வைரஸ் பரவியதை அடிப்படையாகக்கொண்டே தற்போது மரண எண்ணிக்கை வெளிவருகின்றது. மாறாக நேற்று பதிவான விடயங்கள் அல்ல. எனவேதான் தற்போதைய நிலைவரப்படி எதிர்காலத்தில் மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகின்றது.

நாட்டில் 4 நாட்களாக தொடர்ச்சியாக இருக்கும் பயணத்தடை 25 ஆம் திகதி தற்காலிகமாக தளர்த்தப்பட்டால் பெருமளவானவர்கள் வீட்டிலிருந்து வெளியே வருவார்கள். அவ்வாறு இடம்பெற்றால் நான்கு நாட்கள் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பயனற்றுபோகும். எனவேதான் கடுமையான பயணக்கட்டுப்பாடுகளை விதிக்குமாறு வலியுறுத்துகின்றோம்.

குறுகிய கால அடிப்படையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்கும் முறை தொடர்ந்தால் அதனை நெடுநாள் முன்னெடுக்க வேண்டிவரும். பொருளாதார ரீதியிலான பாதிப்புகளும் உருவாகும். 14 நாட்கள் தொடர்ச்சியாக மூடுவதன்மூலம் ஏற்படும் இழப்பை இதனுடன் ஒப்பிட்டால் குறைவானதாகவே இருக்கும்.

70 வீதமான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றினால்தான் பாதுகாப்பான சூழ்நிலை உருவாகும். அவ்வாறானதொரு நிலை ஏற்பட இன்னும் 10 மாதங்களாவது எடுக்கும்.” – என்றார்.

Related Articles

Latest Articles