சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த நவால்னியின் பூதவுடல் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
ரஷிய எதிர்க்கட்சி தலைவரும், ஜனாதிபதி புடினின் தீவிர எதிர்ப்பாளருமான அலெக்சி நவால்னிக்கு பல்வேறு வழக்குகளில் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆர்க்டிக் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த சூழலில் கடந்த மாதம் 17 ஆம் திகதி அவர் திடீரென சிறையிலேயே உயிரிழந்தார்.
அவரது உயிரிழப்புக்கான காரணம் தற்போதுவரை தெரிவிக்கப்படவில்லை.நவால்னி மர்மமான முறையில் சிறையில் மரணம் அடைந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு புடின் பொறுப்பேற்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா வலியுறுத்தி இருந்தது.
நீண்ட இழுபறிக்கு பிறகு நவால்னியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, மாஸ்கோவின் தென்கிழக்கு மரியினோ மாவட்டத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நவால்னியின் இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது.
அதன் பின்னர் தேவாலயத்துக்கு அருகில் உள்ள மயானத்தில் நவால்னியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அலெக்சி நவால்னி அடக்கம் செய்யப்பட்ட கல்லறைக்கு வெளியே, சில ஆதரவாளர்கள் அவரது பெயரை தொடர்ந்து உச்சரித்து கொண்டே இருந்தனர். மேலும் சிலர் கிரெம்ளினுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஆயிரக்கணக்கானோர் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.