கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் கடந்துள்ள 32 நாட்களில் மாத்திரம் 77 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் 22 வரையான சுமார் 8 மாத காலப்பகுதியில் கொரோனாவால் 13 பேரே உயிரிழந்திருந்தனர்.31 ஆம் திகதியாகும்போது மரண எண்ணிக்கை 20 ஆக அதிகரித்தது.
எனினும் கடந்துள்ள 23 நாட்களில் மாத்திரம் 70 பேர் உயிரிழந்துள்ளனர். நாளாந்தம் கொரோனா மரணங்கள் நிகழ்ந்த வண்ணமுள்ளன. கொழும்பு மாவட்டத்திலேயே அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன. கடந்துள்ள 22 நாட்களில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, இலங்கையில் கொரோனா 3 ஆவது அலைமூலம் ( மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) நேற்று வரை 16 ஆயிரத்து 974 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
இதில் 3 ஆயிரத்து 59 பேர் மினுவாங்கொட கொத்தணியுடன் தொடர்புபட்டவர்கள். பேலியகொட கொத்தணி பரவல் 13 ஆயிரத்து 900 ஐ தாண்டியுள்ளது. இவர்களில் 10 ஆயிரத்து 691 பேர் குணமடைந்துள்ளனர்.
அதேவேளை இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் நேற்று நள்ளிரவுவரை 20 ஆயிரத்து 508 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. இவர்களில் 14 ஆயிரத்து 497 பேர் குணமடைந்துள்ளனர். 90 பேர் உயிரிழந்துள்ளனர்.