பாகிஸ்தானில் கொடுமையான முறையில் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்க தமது அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும், படுகொலை மீதான விசாரணைகளின் முன்னேற்றம் பற்றியும் இலங்கைக்கான பாகிஸ்தானிய பதில் உயர் ஸ்தானிகர் அஸ்கிரிய பீட மகாநாயக்கரிடம் விபரித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ஆலோசனைக்கு அமைய, பதில் உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹமட் அஸ்கிரிய மகாநாயக்கர் அதி சங்கைக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரை தரிசித்தார்.
பிரியந்த குமாரவின் படுகொலை தொடர்பான விசாரணைகள் நடத்தப்படும் விதத்தை வரவேற்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைத்திருந்தார்.
இதற்கு பதிலாக, தமது பிரதமர் அனுப்பி வைத்திருந்த கடிதத்தை மகாநாயக்கரிடம் கையளித்த பின்னர், பாகிஸ்தானிய பதில் உயர் ஸ்தானிகர் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்டார்.
அவர் கூறியதாவது: ‘சியால்கொட் நகரில் நிகழ்ந்த சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. இதனை ஒட்டுமொத்த பாகிஸ்தானிய மக்களும் அருவருப்புடன் கண்டிக்கின்றனர். இதில் குற்றவாளிகளாக இனங்காணப்படும் அனைவருக்கும் ஆகக்கூடுதலான தண்டனை வழங்க பாகிஸ்தானிய பிரதமர் தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது பற்றி அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கரைத் தெளிவுபடுத்துமாறு பிரதமர் ஆலோசனை வழங்கினார். குற்றவாளிகளைத் தண்டிக்க நடவடிக்கை எடுத்ததுடன், மறுபுறத்தில் பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் 1948ஆம் ஆண்டு தொடக்கம் நட்புறவு நீடிக்கிறது. இது கிரிக்கட் மூலம் வலுவடைந்துள்ளது. தனியொரு சம்பவத்தின் மூலம் இருதரப்பு உறவுகள் பாதிக்கப்பட மாட்டாது. பாகிஸ்தான் பாதுகாப்பான நாடு. அந்நாட்டுக்கு செல்வதற்கு எவரும் அச்சப்படக்கூடாது’ என்று பதில் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.










