பாகுபலி இயக்குனர் ராஜமௌலி மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு

இயக்குனர் ராஜமௌலி தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சினிமாத் துறை நட்சத்திரங்களும் பலரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் பாலிவுட் சினிமா துறையில் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் மகன் அபிஷேக், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆரத்யா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அதில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆரத்யா ஆகியோர் மட்டும் கொரோனா நெகட்டிவ் என வந்திருக்கிறது. அவர்கள் வீடு திரும்பி விட்ட நிலையில் தற்போது அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி மற்றும் அவர் குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த தகவலை அவரே ட்விட்டரில் அறிவித்து இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது..

எனக்கும் என் குடும்ப உறுப்பினர்களுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அதுவே பின்னர் குறைந்துவிட்டது. ஆனாலும் நாங்கள் டெஸ்ட் எடுத்துக் கொண்டோம். ரிசல்ட் தற்போது வந்திருக்கிறது. அது எங்களுக்கு லேசான கொரோனா பாசிட்டிவ் என காட்டி இருக்கிறது. மருத்துவர்களின் அறிவுரைப்படி நாங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறோம்.

எங்கள் யாருக்கும் எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. அனைவரும் நலமாக இருக்கிறோம். ஆனாலும் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்து வருகிறோம். எங்களுக்குள் ஆன்டிபாடி உருவாகும் வரை காத்திருக்கிறோம். அதன் பிறகு நாங்கள் பிளாஸ்மா தானம் செய்ய இருக்கிறோம் என ராஜமௌலி கூறி இருக்கிறார்.

கடந்த இரண்டு வாரங்களாகவே இயக்குனர் ராஜமவுலி பிளாஸ்மா டொனேஷன் பற்றி சமூக வலை தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவில் இருந்து மீண்ட அனைவரும் பிளாஸ்மா நன்கொடை அளிக்க வேண்டுமென அவர் கூறிவருகிறார். அதே வழிமுறையை தான் அவரும் பின் பற்றி பிளாஸ்மாவை தானம் செய்ய உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

பாகுபலி படங்கள் மூலம் இந்திய அளவில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் ராஜமௌலி அடுத்து ஆர் ஆர் ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படம் மிகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. அதில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷுட்டிங் கொரோனா முழு ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு நேரத்தில் எந்த பணிகளும் செய்ய முடியாத நிலை இருந்ததால் ஷூட்டிங்கிற்கு தயாராகும் பணியை மட்டுமே படக்குழு செய்து வந்தது. இது வரலாற்று படம் என்பதால் ஷூட்டிங் நடத்த அதிக அளவில் துணை நடிகர்கள் தேவை படுவார்கள் என்பதால் ஆர் ஆர் ஆர் ஷூட்டிங் துவங்க இன்னும் நீண்ட தாமதம் ஆகும் என தெரிகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று வாரங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்று முழுமையாக குணம் அடைந்து விட்டார். தான் உட்கொண்ட மருந்துகள் பற்றியும் அவர் சமீபத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

– நன்றி சமயம்.கொம்

Related Articles

Latest Articles